பகை வளர்ந்த கதை:
இது ஆரம்பித்து வளர்ந்த காலம் சுமார் பதினான்கு ஆண்டுகள். இரண்டு முறை தொடர்ந்து விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்று உச்சியில் இருந்த செரீனாவை, 2004 ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதியில் வீழ்த்தி மரியா ஷரபோவா வாகை சூடினார். செரீனாவின் தோல்வி டென்னிஸ் உலகின் மிகப்பெரும் அதிர்ச்சித் தோல்வியாக வர்ணிக்கப்பட்டது.
மகாராணி செரீனா
அதுவரை, பெண்கள் டென்னிசில் அசைக்க முடியாத ராணியாக வலம் வந்த செரீனாவின் பெருமைகள் மறக்கப்பட்டு மரியாவின் புகழ் உச்சியை அடைந்தது. அதே ஆண்டு நடைபெற்ற மற்றொரு இறுதியிலும் செரீனாவை எதிர்த்து ஷரபோவா வென்றார். அதற்குப் பின், செரீனா சுதாரித்துக் கொண்டார். அந்த இரண்டு வெற்றிகளுக்கு பிறகு, சந்தித்த 18 போட்டிகளில் மரியாவுக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது. இந்த காலத்தில் இருவரும், தாங்கள் கொடுத்த பேட்டிகளில் ஒருவரை மற்றவர் சீண்ட, இது தீராப் பகையானது.
சுயசரிதையிலும் பகை
இவர்கள் பகை இன்னும் கொழுந்து விட்டு எரிகிறது என்பதற்கு, இதோ ஒரு உதாரணம். சமீபத்தில், மரியா தன் சுயசரிதை நூலில் செரீனாவை சீண்டும் வகையில் பல தகவல்களை கூறியுள்ளார். அவற்றை மறுத்துள்ள செரீனா, "அவருடைய சுயசரிதையில், என்னை பற்றியே அதிகம் எழுதப்பட்டுள்ளது. அது முழுவதும் கட்டுக்கதை" என கூறியுள்ளார்.
செரீனா வளர்ந்த வேகம்
தொடக்கத்தில் சிறப்பாகவே இருந்தது மரியாவின் டென்னிஸ் பயணம். பின்னர், அவருக்கு ஏற்பட்ட காயங்களால், வெற்றிப் பாதையில் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அதே காலகட்டத்தில், செரீனா முன்பு இருந்ததை விட பல மடங்கு வளர்ச்சியை அடைந்தார். பங்கேற்ற பெரும்பாலான தொடர்களில் பட்டத்தை கைப்பற்றி, யாரும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை படைத்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், பெண்கள் இரட்டையர் பிரிவில் தன் சகோதரி வீனஸ் வில்லியம்ஸோடு இணைந்து 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் பெற்றுள்ளார். கர்ப்பம் மற்றும் குழந்தை பராமரிப்பு காரணமாக, கடந்த ஆண்டில் பல மாதங்கள் ஓய்வில் இருந்த செரீனா தற்போது மீண்டும் களத்துக்கு வந்துள்ளார். ஆனால், எந்த பெரிய வெற்றிகளையும் இது வரை பெறவில்லை.
வீழ்ந்த மரியா
மரியாவோ ரேங்கிங்கில் வீழ்வது, மீண்டும் மேலே வருவது என தடுமாறியபடியே இருந்தார். 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபனில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சுமார் 15 மாதங்கள் தடையை அனுபவித்தார். இந்த தடை, அவரது டென்னிஸ் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களாக அமைந்தது. தடை முடிந்து ஓராண்டாக விளையாடி வரும் மரியா, இது வரை பெரிய வெற்றிகள் எதுவும் பெறவில்லை. ஊக்கமருந்து தடையால், பொருளாதார ரீதியாக பின்னடைந்து, தனக்கு எதிரான செய்திகளால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார், மரியா.
நடக்குமா 23ஆவது சந்திப்பு
இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில், மரியாவும், செரீனாவும் சந்திக்க இருந்த நிலையில், காயம் காரணமாக செரீனா ஆட்டத்தில் இருந்து விலகினார். இது ரசிகர்கள் இடையே, பெறும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது நடக்கவிருக்கும் விம்பிள்டன் தொடரில் இருவரும் விளையாட உள்ள நிலையில், இந்த முறையாவது இருவரும் களத்தில் சந்திப்பார்களா? பார்மில் இல்லாத செரீனாவை வீழ்த்தி மரியா பழி தீர்ப்பாரா? அல்லது இந்த முறையும் செரீனா வெற்றி வாகை சூடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.