டெல்லி: தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதாக உலகின் முன்னணி நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ஷரபோவாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா, இந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஊக்கமருந்து சோதனை மாதிரி எடுக்கப்பட்டது.
அந்த மாதிரியில் மெல்டோனியம் என்ற மருந்தை ஷரபோவா பயன்படுத்தியது சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து இவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மெல்டோனியத்தை கடந்த ஜனவரி மாதம்தான் ஊக்க மருந்தாக அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் ஊக்கமருந்து தடுப்புப்பிரிவு விசாரணை மேற்கொண்டது. அதன் இறுதியில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷியா அணி சார்பில் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கிடையே ஷரபோவா கடந்த 10 வருடங்களாக மெல்டோனியத்தை பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறேன் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஷரபோவா.
மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக செய்தி வெளியான உடனேயே பெரும்பாலான ஸ்பான்சர்கள் அவரை விட்டு விலகின. இதனால் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனை என்ற பெருமையை இழந்தார். அதை செரீனா தக்கவைத்து கொண்டார். டென்னிஸ் மூலம் இதுவரை 36 மில்லர் டாலர் சம்பாதித்துள்ளார்.