சர்ச்சை வீடியோ
சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய இந்த வீடியோ உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் பங்கேற்ற நபர்கள் இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்து சபதம் எடுத்து கொண்டனர். இதில் மேலும் பல சர்ச்சை கருத்துகளும் இடம்பெற்று இருந்தன.
மார்டினா கருத்து
இந்த சம்பவத்துக்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, வழக்குப் பதிவும் செய்யவில்லை. இதனிடையே இந்த வீடியோவை பகிர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்தில்லோவா, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பலரும் இங்கு வெறுப்பு வென்றுவிட்டதாக அவருக்கு பதில் அளித்தனர்.
இந்தியாவின் நிலை
இதற்கு பதில் அளித்த மார்டினா நவரத்தில்லோவா, இந்தியாவின் நிலை வருத்தம் அளிக்கிறது. இந்தியா ஒரு சிறந்த நாடாக விளங்கியது,இந்திய மக்கள் அற்புதமானவர்கள், இந்த நிலையை சரி செய்ய முடியும். ஆனால் நாட்டின் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தான் இதனை மாற்ற முடியும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடி தலைமையில் இந்த மாற்றம் நிகழாது என்று எனக்கு தெரியும். நான் நினைப்பது தவறாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று பதில் அளித்தார்.
கருத்துக்கு எதிர்ப்பு
ஏற்கனவே பிரபல பாப் பாடகி ரிஹானா, இந்தியா குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்தியாவிற்கு களங்கம் விளைவிக்க வெளிநாட்டு சதி இது என்று கூறப்பட்டது. தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்தில்லோவா,,இந்தியா குறித்து பதிவிட்டு இருப்பது மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.வழக்கம் போல் மார்டினா நவரத்தில்லோவா கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.