நியூயார்க்: அமெரிக்காவில் ஹார்வே புயலைத் தொடர்ந்து இர்மா புயல் தாக்கியுள்ள அதே நேரத்தில், யுஎஸ் ஓபனில் ரபேல் நடால் புயல் தாக்கியுள்ளது. எதிர்பார்த்ததைப் போலவே, தனது 16வது பட்டத்தை வென்றார் ஸ்பெயினின் நடால்.
நேற்று இரவு நடந்த பைனலில், தரவரிசையில், 32வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை, 6-3, 6-3, 6-4 என்ற கணக்கில் வென்றார. 1973க்குப் பிறகு, தரவரிசையில் மிகவும் குறைவாக உள்ளவர் பைனலில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த, 2003ல் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடத் துவங்கினார், தற்போது 31 வயதாகும் நடால். 2005ல் இருந்து அவருடைய வெற்றிப் பயணம் துவங்கியது. காயம் காரணமாக, 2015, 2016ல் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. மற்றபடி, கடந்த, 12 ஆண்டுகளில் நடால் புயல், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
மூன்றாவது முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றுள்ள நடால், இந்த ஆண்டில், இரண்டு பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் பெடரர் மற்ற இரண்டு பட்டங்களை வென்றார்.
அதிக பட்டங்கள் வென்றவர்கள் பட்டியலில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 19 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில், 16 பட்டங்களுடன் ரபேல் நடால் உள்ளார்.