லண்டன்: புல் தடுக்கி பயில்வான்களுக்குப் பிடிக்காத ஒரே டென்னிஸ் தொடர் விம்பிள்டன்தான். ஜாம்பவான் இவான் லெண்டில் எத்தனையோ சாதித்தும் கடைசி வரை விம்பிள்டனில் மட்டும் சாதிக்கவே முடியவில்லை.. அப்படி ஒரு சிறப்பு விம்பிள்டனுக்கு உண்டு.
இதோ விம்பிள்டன் வந்து விட்டது. இந்த முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒரு இந்தியர் கூட இடம் பெறாத சோகம் அரங்கேறுகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விம்பிள்டன் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்தியர்கள் யூகி பாம்ப்ரி, சோம்தேவ் தேவ்வர்மன், சாகேத் மைனேனி ஆகியோர் தோற்று வெளியேறி விட்டனர்.
மைனேனி, பிரான்சின் கென்னி டி ஷெப்பரிடமும், யூகி, இத்தாலியின் மட்டியோ டோனாட்டியிடமும், சோம்தேவ், ஸ்பெயின் வீரர் நிகோ கெர்வன்டஸிடமும் தோல்வியைத் தழுவி வெளியேறினர்.
இரட்டையர் பிரிவு செம
அதேசமயம் இரட்டையர் பிரிவில் இந்தியா வலுவாக உள்ளது. லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா ஆகியோர் உள்ளனர். அதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா இருக்கிறார்.
திங்கள்கிழமை முதல் விம்பிள்டன் போட்டிகள் தொடங்குகின்றன. வழக்கமாக விம்பிள்டனில் வீரர்களுக்குப் போட்டியாக மழையும் விளையாடும். இந்த முறை எப்படியோ!