அரையிறுதியில் ரோஜர் பெடரர் தோல்வி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சர்வதேச வீரர்கள் பங்கேற்று ஆடிவருகின்றனர். கடந்த 20ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதிவரை நடைபெறும் இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சுடன் மோதிய ரோஜர் பெடரர் தோல்வி அடைந்து தன்னுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
அரையிறுதியில் வென்ற ஜோகோவிச்
ஸ்விஸ் வீரர் ரோஜர் பெடரர் டெனிஸ் சாண்ட்கிரன்னுடன் காலிறுதியில் மோதி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் மோதிய அவர், 7க்கு 6, 6க்கு 4 மற்றும் 6க்கு 3 என்ற செட் கணக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். இதன்மூலம் ரோஜர் பெடரர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ஆட்டத்தை கண்டுகளித்த அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
டெனில் சாண்ட்கிரனுடன் மோதல்
காலிறுதிப் போட்டியில் சாண்ட்கிரன்னுடன் ரோஜர் பெடரர் மோதி வெற்றி கண்ட போதிலும் ஆட்டத்தின்போது அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது குறித்த கேள்வி எழுந்தது. ஆயினும் தன்னுடைய வலியை பொருட்படுத்தாமல் ரோஜர் பெடரர் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
பெடரருக்கு பாராட்டு
அரையிறுதி போட்டியில் ரோஜர் பெடரர் தோல்வியை கண்டு, ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச், பெடரர் குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளார். காயத்தினால் ஏற்பட்ட வலி, விளையாடும்போது எந்தமாதிரியான சிரமத்தை தரும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் தான் விளையாடுவதை தவிர்ப்பேன் என்றும் கூறியுள்ள ஜோகோவிச், ஆனால் தனது வலியை பொருட்படுத்தாமல் ஆடிய பெடரர் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
"ஓய்வு பெறும் எண்ணமில்லை"
சர்வதேச அளவில் 3வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் இதுவரை 31 கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் விளையாடி 20 பதக்கங்களை தன்வசப் படுத்தியுள்ளார். இந்நிலையில் தான் தொடர்ந்து விளையாடி மேலும் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன்வசப்படுத்துவேன் என்றும் தற்போது ஓய்வுபெறும் எண்ணமில்லை என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் போட்டியில் விளையாடுவேன்
இந்நிலையில் தான் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளதாகவும் தன்னுடைய வயது ஒரு பொருட்டல்ல என்றும் தெரிவித்துள்ள ரோஜர் பெடரர்,அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் போட்டியில் தான் பங்கேற்று ஆடுவேன் என்றும் கூறியுள்ளார். அரையிறுதியில் தான் சிறப்பாக விளையாடியதாக தெரிவித்த பெடரர், ஆனால் உடல் அளவிலும் மனதளவிலும் ஜோகோவிச் மிகுந்த திறமை வாய்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.