31ம் தேதி துவக்கம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள நிலையில், அங்கு தற்போது அமெரிக்க ஓபன் 2020 தொடர் வரும் 31ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து அதில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். மோசமான நேரத்தில் மோசமான முடிவு என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
ஜோகோவிச் பங்கேற்பதாக உறுதி
4 முறை உலக சாம்பியன் ரபேல் நடால், மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஷ்லி பார்டி மற்றும் நிக் கிர்கியோஸ் ஆகிய முன்னணி வீரர்கள் அமெரிக்க ஓபன் தொடரை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர் நோவக் ஜோகோவிச் இந்த தொடரில் தான் பங்கேற்று விளையாடவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
எளிதான முடிவில்லை என ட்வீட்
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கிடையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவது எளிதான முடிவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பாதித்த ஜோகோவிச்
கடந்த ஜூன் மாதத்தில் பால்கன்ஸ் பகுதியில் தொண்டு நிறுவனத்திற்காக டென்னிஸ் போட்டியை ஏற்பாடு செய்த ஜோகோவிச் மற்றும் சக வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது முடிவுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதனிடையே, தற்போது தான் மிகவும் நலமாக உள்ளதாகவும் அதிகமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாட பிட்டாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.