நோவக் ஜோகோவிச் ஆட்டம்
நியூயார்க்கில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் 2020 தொடரில் பங்கேற்று விளையாடிவந்த டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் 4வது சுற்றில் நேற்று ஸ்பானிய வீரர் கரோனா பஸ்டாவை எதிர்கொண்டு ஆடிய நிலையில் முதல் செட்டில் தன் சர்வை தோற்றார். இதனால் மிகுந்த வெறுப்பிற்கு உள்ளான அவர் செய்த ஒரு செயல் தற்போது அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
லைன் நடுவர்மீது தாக்குதல்
சர்வை தோற்றதால் வெறுப்பில் தன்னுடைய டென்னிஸ் ராக்கெட்டால் பந்தை பின்பக்கமாக அவர் ஓங்கி அடிக்க, பந்து அங்கிருந்த பெண் லைன் நடுவரின் தொண்டையை பதம் பார்த்தது. இதனால் அவர் நிலைகுலைந்தார். இதையடுத்து அங்கிருந்த நடுவர்கள் விதிமுறைகளின்படி யுஎஸ் ஓபன் தொடரிலிருந்து ஜோகோவிச்சை தகுதி நீக்கம் செய்தனர். அவருக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெறுமைக்குள்ளாகியுள்ளதாக பதிவு
இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய ஜோகோவிச் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டுள்ளார். நடந்த சம்பவம் தன்னை மிகுந்த வெறுமைக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த நடுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தான் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தகுதி நீக்கத்தால் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை தணிக்க தான் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
18வது கிராண்ட்ஸ்லாமை நோக்கிய பயணம்
இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற 26 போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் கூட தோற்காமல் தொடர்ந்து வெற்றிப்பாதையில் மட்டுமே பயணித்து வந்தார் ஜோகோவிச். மேலும் தனது 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அவரது பயணம் இந்த தகுதி நீக்கத்தால் தடை பட்டுள்ளது. தற்போது இந்த தகுதி நீக்கத்தால் அவரது தரவரிசை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.