பிராந்திய தொடர்
டென்னிசில் உலக அளவில் நம்பர் ஒன்னாக இருப்பவர் நோவக் ஜோகோவிச். இவர் கடந்த மாதத்தின் மத்தியில் செர்பியாவில் பிராந்திய அளவிலான தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தினார். இதில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஜோகோவிச், அவரது மனைவி மற்றும் சில வீரர்கள், பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மன்னிப்பு கேட்ட ஜோகோவிச்
சமூக இடைவெளியும் பின்பற்றப்படாமல், சில ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த தொடர் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அங்கு கொரோனா அதிகமாக பரவியதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட இந்த தொடரில் சமூக இடைவெளியை பின்பற்றாத தனது செயலுக்காக ஜோகோவிச் தனது ரசிகர்கள் உள்ளிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
ஜோகோவிச் பரிகாரம்
இந்நிலையில் செர்பியாவில் அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தென்மேற்கு நகரான நோவி பசாருக்கு இந்திய மதிப்பில் 34 லட்சம் ரூபாயை ஜோகோவிச் நன்கொடையாக வழங்கியுள்ளார். தான் நடத்திய தொடரால் வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரவ காரணமாக இருந்த ஜோகோவிச், இந்த நன்கொடை மூலம் பரிகாரத்தை தேடியுள்ளதாக டென்னிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செர்பியாவில் 15,000 பேர் பாதிப்பு
நோவி பசாரில் அதிகமாக கொரோனா பரவல் காணப்படுவதையடுத்து கடந்த மாதத்தின் இறுதியில் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல செர்பியாவில் கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 50 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். 70 லட்சம் பேர் வசித்துவரும் செர்பியாவில் கொரோனாவிற்கு இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.