என்ன காரணம்
இந்த தொடரில் பங்கேற்க அனைத்து வீரர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் ஜோகோவிச் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லாதவர். எனவே மருத்துவ விதிவிலக்கு சான்றிதழ்களை கொண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்றார். ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம் தானே? என மக்கள் கண்டன குரல்களை எழுப்பியதால் உடனடியாக ஜோகோவிச் தடுத்து நிறுத்தப்பட்டு, விசா ரத்து செய்யப்பட்டது. மேலும் நாடுகடத்த ஏற்பாடுகளும் தீவிரமடைந்தன.
ஜோகோவிச்சின் வழக்கு
இதனையடுத்து அகதியை போன்று தனி ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்ட ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க கூடாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜோகோவிச் தரப்பில் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.
நீதிமன்ற தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் ஜோகோவிச்-க்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம். அவரின் பாஸ்போர்ட், விசா, மற்ற ஆவணங்கள் அனைத்தும் உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதி ஆண்டனி கெல்லி உத்தரவிட்டார். ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறையை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த அதிகாரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதியின் கண்டனம்
ஆனால் அமைச்சரின் அதிகாரத்தில் விசா ரத்து செய்யப்பட்டால், ஜோகோவிச்சால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படும். இதனால் கொந்தளித்த நீதிபதி, அந்நாட்டு அரசு வழக்கறிஞருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்கலாம் என்றும் அறிவித்தார்.
கிராண்ட் ஸ்லாம் பட்டம்
டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரான நாவோக் ஜோகோவிச் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர். அமெரிக்க ஓபனில் மட்டும் 9 முறை பட்டம் வென்றுள்ளார். இந்தாண்டும் பட்டம் வென்றுவிட்டால், அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.