கேள்விக்குறியான டென்னிஸ் போட்டிகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் விம்பிள்டன் உள்ளிட்ட பல்வேறு டென்னிஸ் போட்டிகள் கேள்விக்குறியாகியுள்ளன. இந்நிலையில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை ரசிகர்கள் அற்ற காலி மைதானத்தில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு டென்னிஸ் சூப்பர்ஸ்டார் ரோஜர் பெடரர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், தற்போது இரண்டுமுறை விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ள பெட்ரா க்விடோவாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
ரசிகர்கள் என்ஜின் போன்றவர்கள்
செக் குடியரசின் தொடரில் பங்கேற்றுள்ள க்விடோவா, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மிகப்பெரியவை என்றும் அவை ரசிகர்கள் இல்லாமல் நடக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். ரசிகர்கள் என்ஜின் போன்றவர்கள் என்றும் அவர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறுவது சரியாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
போட்டியை ரத்து செய்வேன்
இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் கலந்துகொள்ள தனக்கு வயதிருக்கிறது என்று தெரிவித்துள்ள க்விடோவா, ஆனால் இவ்வாறு ரசிகர்கள் இன்றி விளையாடுவதைவிட தான் அதை கேன்சல் செய்துவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல கைக்குலுக்குவது போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போட்டியின்போது மகிழ்ச்சி அளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேக்கப்பிற்கு அவசியமில்லை
உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் 12வது இடத்தில் உள்ள க்விடோவா, மாஸ்க் போட்டுக்கொண்டு போட்டிகளை விளையாடுவதிலும் நன்மை இருப்பதாக நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார். மாஸ்க் போடுவதால், தான் மேக்-அப் போட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.