டெல்லி: நவீன யுக டென்னிஸ் விளையாட்டில் மிகச் சிறந்த வீரர்களை பட்டியலிட்டால் கண்டிப்பாக ஸ்பெயினின் ரபேல் நடால் பெயர் டாப்பில் இருக்கும். அவர் புதிய வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ளார்.
டென்னில் விளையாட்டில் களிமண் மைதானத்தில் கிங் என்று அழைக்கப்படுபவர் ஸ்பெயினின் ரபேல் நடால். 31 வயதாகும் நடால், 2003ல் முதல் முறையாக சர்வதேச அரங்கில் களமிறங்கினார்.
பார்சிலோனா ஓபன் போட்டியில் நேற்று அவர் பட்டம் வென்றார். 11வது முறையாக இந்தப் பட்டத்தை வென்று புதிய சாதனையைப் படைத்தார்.
கடந்த வாரம் தான் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்றார். அந்தத் தொடரில் 11வது முறையாக பட்டம் வென்றார்.
இந்த நிலையில் அடுத்ததாக பிரெஞ்ச் ஓபன் போட்டியில் விளையாட உள்ளார். இதவரை 10 முறை அவர் பட்டம் வென்றுள்ளார். தற்போது அவர் உள்ள பார்மில், 11வது முறையாக அவர் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால், இதுவரை 77 பட்டங்களை வென்றுள்ளார். களிமண் மைதானத்தின் ராஜா என்று அவர் அழைக்கப்படுவதற்கு காரணம், அந்த மைதானத்தில் இதுவரை 401 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் 35ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளார்.
இரண்டு சர்வதேச போட்டிகளில் 11 முறை பட்டங்களை வென்றுள்ள நடால், கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் 11வது பட்டத்தை வென்று புதிய சாதனைக்கு தயாராக உள்ளார்.