சர்வதேச அளவில் லாக்-டவுன்
கொரோனா வைரஸ் பீதி சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்பில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் லாக்-டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
ரபேல் நடால் நேரலையில் பேச்சு
இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் வீரர்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. விம்பிள்டன் போட்டிகளில் இருமுறை கோப்பையை வென்றுள்ள ரபேல் நடால், இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் நேலையில் உரையாடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடால் பேச்சு
டென்னிஸ் விளையாடாமல் இருப்பது தனக்கு எவ்வாறு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து இந்த நேரலையில், ரபேல் நடால் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தன்னுடைய வீட்டில் டென்னிஸ் கோர்ட்டும் இல்லாத நிலையில், வெறுமனே பிட்னஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு வருவதும் தனக்கு மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் சந்திப்பு
கடந்த 15 ஆண்டுகளாக தானும், ரோஜர் மற்றும் முர்ரே ஆகியோரும் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தாலும், இந்த லாக்டவுன் காலத்தில்தான் தாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தன்னுடைய பேச்சின் இடையில் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி காலத்தில் அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
ரோஜர் பெடரர் மகிழ்ச்சி
இதனிடையே, தன்னுடைய கால் மூட்டில் ஏற்பட்டுள்ள காயம் ஆறுவதற்கான கால அவகாசம் தற்போது கிடைத்துள்ளதாகவும், இதனால் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ரோஜர் பெடரர் கூறியுள்ளார். தான் விளையாடுவதற்கு எவ்வளவு காலம் ஆனாலும், தற்போது கிடைத்துள்ள இந்த இடைவெளி தனது காயம் ஆறுவதற்கான காலம் என்றும் அவர் கூறியுள்ளார்.