மாட்ரிட் : முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார் ரபேல் நடால்.
தன் சாம்பியன் பட்டத்தை ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிக் போன்ற பிற முன்னணி வீரர்களை எதிர்த்து நடால் தக்க வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நடால் கொரோனா வைரஸ் காரணமாக விலகி உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த சர்வதேச டென்னிஸ் தொடரும் நடைபெறவில்லை. நோவாக் ஜோகோவிக் நடத்திய கண்காட்சி டென்னிஸ் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை நடத்த அதன் நிர்வாகம் முடிவு செய்து அதில் உறுதியாக இருந்தது. இந்த தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடக்க உள்ளது.
தள்ளி தள்ளி வைச்சோம்.. இனிமே வாய்ப்பே இல்லை.. மாட்ரிட் ஓபன் ரத்து!
இந்த நிலையில், ரபேல் நடால் தான் நீண்ட சிந்தனைக்குப் பின் தான் இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை நம்மால் இன்னும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை என தன் விலகலுக்கு காரணம் கூறி உள்ளார் ரபேல் நடால்.
முன்னதாக கடந்த ஆண்டு மகளிர் ஒற்றையர் சாம்பியன் ஆஷ்லே பார்ட்டியும் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.