பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் விலகுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு தேவைப்படுவதால் போட்டியில் இருந்து விலகுவதாக பெடரர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடி வந்தார். 4 சுற்றுகள் வரை சிறப்பாக தோல்வி இன்றி ஆடியவர் கால் இறுதி சுற்று செல்வதற்கான ஆட்டத்தை நாளை ஆடுவதாக இருந்தது.
கடைசி போட்டி 40 நிமிடங்கள் சென்ற நிலையில் திணறியபடி, கஷ்டப்பட்டுதான் ரோஜர் பெடரர் நீண்ட நேரம் ஆடினார். 7-6 (7/5), 6-7 (3/7), 7-6 (7/4), 7-5 என்று சுற்றுகள் நீண்டு சென்றது. டொமினிக் கூப்பரை வீழ்த்த கொஞ்சம் சிரமப்பட்டாலும் 40 நிமிட போராட்டத்திற்கு பின் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் தொடர்ந்து இந்த தொடரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஜர் பெடரர் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். உடல்நிலையை கவனிக்க வேண்டும், ஓய்வு அவசியம். விம்பிள்டன் தொடரில் ஆட வேண்டும். அதனால் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறேன் என்று ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
2020ல்தான் இவருக்கு காலில் இரண்டு ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அதில் இருந்து மீண்டவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆட தொடங்கி உள்ளார். ஜூன் 28ம் தேதி விம்பிள்டன் ஆட்டம் இருப்பதால் ரோஜர் பெடரர் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.
எனக்கு காலில் இரண்டு சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. உடனே அதிக போட்டிகளில் ஆட முடியாது. என் உடலுக்கு போதிய ஓய்வு தேவை. என் உடல் மீது நான் அழுத்தம் செலுத்த கூடாது. உடல் குணமடைய நேரம் தர வேண்டும், என்று ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.
விம்பிள்டன் போட்டியில் மீண்டும் ஆடி வெல்வதே தனது குறிக்கோள் என்று ரோஜர் பெடரர் கூறி வந்து இருக்கிறார். பிரென்ச் ஓபன் மீது இவர் பெரிதாக ஆர்வம் செலுத்தியதே கிடையாது. இந்த நிலையில் விம்பிள்டன் போட்டிக்கு தயார் ஆகும் வகையில் பெடரர் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.