கத்தார் ஓபனில் பங்கேற்ற பெடரர்
கடந்த 405 நாட்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இரு தினங்களுக்கு முன்பு தோஹாவில் நடைபெற்ற கத்தார் ஓபன் 2021 டென்னிஸ் தொடரின் போட்டியில் பங்கேற்று பிரிட்டன் வீரர் டான் இவான்சை வெற்றி கொண்ட ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேறினார்.
சர்வதேச போட்டியில் பங்கேற்பு
இந்த 405 நாட்கள் காலகட்டத்தில் அவருக்கு முட்டியில் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவர் ஜியார்ஜியா வீரர் நிகோலஸ் பாசிலாஸ்விலியிடம் போட்டியிட்டு தோற்றுள்ளார்.
அறுவை சிகிச்சைகள்
முன்னதாக கடந்த 2016ல் பாசிலாஸ்விலியுடன் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மோதிய பெடரர், 6-2, 6-1 மற்றும் 6-2 என்ற கணக்கில் அவரை எளிதாக வெற்றி கொண்டார். ஆனால் தற்போது நீண்ட இடைவெளி மற்றும் அறுவை சிகிச்சைகள் அவருக்கு தோல்வியை அளித்துள்ளது.
மண்ணை கவ்விய பெடரர்
நேற்றைய போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 50 நிமிடங்கள் நடைபெற்றது. 405 நாட்களுக்கு பிறகு அவர் பங்கேற்ற 2வது போட்டி இது. 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரர், இந்த போட்டியில் தோல்வியுற்றுள்ள நிலையில், அவர் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர் என்று உலக தரவரிசையில் 42வது இடத்தில் உள்ள பாசிலாஸ்விலி பாராட்டு தெரிவித்துள்ளார்.