மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இளம் வீரர் சிட்சிபாஸிடம் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் அனைவரும் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. பெடரர் ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், 20 வயது இளம் வீரர் ஸ்டேபானோஸ் சிட்சிபாஸ்-ஐ நான்காவது சுற்றில் சந்தித்தார் பெடரர். இந்த போட்டியில் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் பெடரர்.
ரோஜர் பெடரரை ஆதர்ச நாயகனாக கொண்டு டென்னிஸ் விளையாட்டுக்குள் வந்த சிட்சிபாஸ் அவரையே வீழ்த்தி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். "இந்த பூமியிலேயே இப்போது நான் தான் மகிழ்ச்சியான மனிதன்" என இந்த வெற்றியை கொண்டாடினார் சிட்சிபாஸ்.
சிட்சிபாஸ் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்கள் பலரை வீழ்த்தி ஆச்சரியம் அளித்துள்ளார். பெடரர் - நடால் - ஜோகோவிச் ஆகியோருக்கு பின் அடுத்த தலைமுறை டென்னிஸ் வீரர்களில் சிட்சிபாஸ் முக்கிய இடத்தை பிடிப்பார் என இப்போதே ஆருடங்கள் கிளம்பியுள்ளன.