சின்சினாட்டி: அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ஜோகோவிக் மோத உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரோஜர் பெடரர் அரையிறுதியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டேவிட் கோஃபினை சந்தித்தார். அந்த போட்டியில் முதல் செட்டை 7-6(3) என பெடரர் கைப்பற்றினார். அடுத்த செட்டில் 1-1 என ஆடம் இருந்த நிலையில், டேவிட் கோஃபின் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். இதையடுத்து பெடரர், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிக், க்ரோஷியாவின் மரின் சிலிக்கை சந்தித்தார். மூன்றாவது செட் வரை சென்ற அந்த போட்டியில் ஜோகோவிக் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
உலகின் நான்கு பெரிய வீரர்கள் (big four) என டென்னிஸ் உலகில் வர்ணிக்கப்படும் நான்கு முக்கிய வீரர்களில் இருவர், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் இறுதியில் மோத உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில், சைமோனா ஹாலெப் 6-3, 6-4 என்ற செட்களில் அரினாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு பெண்கள் அரையிறுதியில், பெட்ரா கேவிட்டோவா, நெதர்லாந்தின் கிகி பெர்டேன்ஸ்-இடம் தோல்வி அடைந்தார். உலக பெண்கள் டென்னிஸ் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சைமோனா ஹாலெப், கிகி பெர்டேன்ஸ்-உடன் இறுதியில் மோத உள்ளார்.