பழமையான போட்டி தொடர்
கடந்த 1877 முதல் நூற்றாண்டை கடந்து விம்பிள்டன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களின் போது இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு உலகமே முடங்கியுள்ள நிலையில், விம்பிள்டன் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜூன் 29ல் முதல் போட்டி
சர்வதேச அளவில் டென்னிஸ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய விம்பிள்டன் போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. திட்டமிட்டபடி விம்பிள்டன் போட்டிகள் துவங்கப்பட்டால், இரண்டு வாரங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நவோக் டிஜோகோவிச் மற்றும் சிமோனா ஹாலெப் ஆகிய இருவருக்கிடையில் தனிநபர் பிரிவில் ஜூன் 29ம் தேதி நடைபெற்றிருக்கும்.
விம்பிள்டன் தொடர் ரத்து
கொரோனா பீதி காரணமாக அமெரிக்க ஓபன், இந்தியன் வெல்ஸ் உள்ளிட்ட அனைத்து டென்னிஸ் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த விம்பிள்டன் போட்டிகளை அடுத்த ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை நடத்த ஆல் இங்கிலாந்து கிளப் முடிவு செய்து அறிவித்துள்ளது.
செரீனா வில்லியம்ஸ் ஷாக்
இந்நிலையில், இதுவரை 8 முறை விம்பிள்டன் கோப்பைகளை வென்றுள்ள ரோஜர் பெடரர், எல்லாம் போய்விட்டதாக உணர்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார். விம்பிள்டன் தொடர் ரத்தை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இதேபோல 7 முறை மகளிர் தனிநபர் கோப்பையை வென்றுள்ள அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், இந்த முடிவு அதிர்ச்சியளித்துள்ளதாக கூறியுள்ளார்.
தேற்றிக்கொண்ட வீரர்கள்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்நிலையில், ஆல் இங்கிலாந்து கிளப்பின் இந்த முடிவு சரியானதுதான் என்று சிமோனா ஹாலெப், பில்லி ஜீன் கிங் உள்ளிட்ட சர்வதேச டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு பாராட்டுக்குரியது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.