பெடரர் விலகல்
அதாவது, அமெரிக்க டென்னிஸ் ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக ஃபெடரர் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில் அவருக்கு வலது முழங்காலில் மூன்றாவது அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், "புல் தரை தொடர்கள் மற்றும் விம்பிள்டனில் போட்டிகளில் எனக்கு காயம் ஏற்பட்டதால், மருத்துவர்களிடம் என் முழங்காலுக்கு நிறைய சோதனைகள் செய்து வருகிறேன். அதில், நீண்ட காலத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், எனக்கு அறுவை சிகிச்சை தேவை என்று என்னிடம் சொன்னார்கள். அதனால் நான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால், வேறு வழியில்லை. நான் பல வாரங்கள் ஒரு துணையுடன் தான் நடக்க வேண்டியிருக்கும். பல மாதங்கள் விளையாட்டிலிருந்தும் விலகி இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஓட விரும்புகிறேன்
மேலும் அவர், "நான் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன். நான் பின்னர், மீண்டும், மீண்டும் ஓட விரும்புகிறேன். மீண்டும் களத்திற்கு திரும்பும் வகையில் எனக்கு நம்பிக்கையை கொடுக்க விரும்புகிறேன். நான் யதார்த்தமானவன், என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இந்த வயதில் இப்போது இன்னொரு அறுவை சிகிச்சை செய்து அதை முயற்சிப்பது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும்" என்று ஃபெடரர் உருக்கமுடன் கூறியுள்ளார்.
பல மாதங்கள் ஓய்வு
ஆம்! பெடரர் கூறியுள்ளது உண்மை தான். அவர் இப்போது 40 வயதை எட்டிவிட்டார். இந்த வயதில் அறுவை சிகிச்சை செய்து, அதன்பிறகு பல மாதங்கள் ஓய்வில் இருந்து, மீண்டும் நம்பிக்கையுடன் களத்திற்கு திரும்பி, வெற்றிப் பெற முயற்சிப்பது என்பதை நினைத்துப் பார்த்தாலே தலை சுற்றிவிடும். அப்படி இருக்கையில் அதையும் எதிர்கொள்ள ஃபெடரர் தயாராக இருப்பது உண்மையில் பெரிய விஷயம் தான். இதே இடத்தில் வேறு ஒரு வீரர் இருந்திருந்தால் அவர் ஓய்வுப் பெறவே விரும்புவார். அதற்கே வாய்ப்புகள் அதிகம்.
ரசிகர்கள் ஃபீலிங்ஸ்
ஃபெடரர், 2020 பிப்ரவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு தனது முழங்கால் காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்ட பிறகும், பல தொடர்களை அவர் தவறவிட நேர்ந்தது. அவர் மே மாத இறுதியில் பிரெஞ்சு ஓபனில் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு திரும்பினார், பின்னர் மூன்று வெற்றிகளுக்குப் பிறகு போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் சமீபத்தில் விளையாடிய போட்டி, கடந்த மாதம் நடைபெற்ற விம்பிள்டன் காலிறுதி போட்டியாகும். அதிலும் அவர் தோல்வியடைந்து வெளியேறினார். மேலும் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்தும் முழங்கால் காயம் காரணமாக வெளியேறினார். இதுகுறித்து அவர், முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுகிறேன். ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நான் விலக வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். ஒவ்வொரு முறையும் நான் சுவிட்சர்லாந்துக்காக விளையாடுவதை, எனது டென்னிஸ் வாழ்க்கையின் மரியாதை மற்றும் சிறப்பம்சமாக நினைப்பதால், இம்முறை கலந்து கொள்ள முடியாதது குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்" என்று வேதனையுடன் பதிவிட, அவரது ரசிகர்கள் ஃபீலிங்ஸ் மோடுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில், யு.எஸ். ஓபனில் இருந்து விலகுவதோடு மட்டுமில்லாமல், அறுவை சிகிச்சை மேற்கொண்டு பல மாதங்களுக்கு விளையாட மாட்டேன் என்று அறிவித்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஓய்வு தேவை
2003 மற்றும் 2010 க்கு இடையில் ஃபெடரர் தனது 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். அவரது 30 களின் பிற்பகுதியில்.. அதாவது 30 வயதுக்கு மேல் டென்னிஸ் விளையாட்டின் உச்சத்தில் இருந்தார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனை 2017 ஆம் ஆண்டில் மீண்டும் வென்றார். மீண்டும், 2018 ஆம் ஆண்டில் மெல்போர்ன் பார்க்கில் தனது விம்பிள்டன் பட்டத்தை பாதுகாத்தார். 2018ல் வென்றதே அவரது சமீபத்திய கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் ஆகும். 2019 இல் அவர் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிடம் தோற்றார். இந்த சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன், ஆக. 30 ல் நியூயார்க்கில் தொடங்குகிறது. நடால் காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்ததால், தனக்கு ஓய்வு தேவை என்று அறிவித்துவிட்டார். இதனால், அமெரிக்க ஓபன் பெரிய அளவுக்கு களைக்கட்டுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. கிரிக்கெட்டைப் போன்ற அடுத்தடுத்து டென்னிஸிலும் தொடர்கள் நடைபெறுவது இந்த கவனிக்க வேண்டிய விஷயமாகவும். சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பலர் மன அழுத்தம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகி ஓய்வில் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்