டெல்லி: நச்சுத்தன்மை வாய்ந்த நபரை வெல்வதற்கு ஒரே வழி, அவருடன் விளையாடாமல் இருப்பதுதான் என்று லியாண்டர் பயஸ் கருத்துக்கு சானியா மிர்சா காட்டமாக பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா விளையாட தேர்வு பெற்றார். இதனால் இந்தியாவின் மற்றொரு வீரருடன் போபண்ணா கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. போபண்ணா, லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு லியாண்டர் பயசுடன் இணைந்துதான் விளையாட வேண்டும் என்று கூறியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ரியோ ஒலிம்பிற்கு தகுதிப் பெற்றார். அவர் தன்னுடன் விளையாடும் நபரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. அவர் போபண்ணாவுடன் ரியோவில் கலந்து கொண்டார். இந்த ஜோடி அரை இறுதியில் தோற்று, வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் வெற்றியை கோட்டை விட்டது.
2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா லியாண்டர் பயசுடன் விளையாடினார். அப்போது சானியா மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர விரும்பினார். ஆனால், இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு சம்மதிக்கவில்லை.
அதன்பின் பொதுவாக போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் லியாண்டர் பயசுடன் ஜோடி சேர விரும்பில்லை. இந்நிலையில் இந்தியாவில் டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் டெல்லியில் மோதின. இதில் இந்தியா 0-5 என தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியின் போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீனியர் வீரர் லியாண்டர் பயஸ், ரியோவிற்கு இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடி சரியாக அமையவில்லை. ரியோ ஒலிம்பிக்சில் கலப்பு இரட்டையரில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பிருந்தது. என்று பயஸ் கூறியிருந்தார்.
போபண்ணா, சானியா ஜோடியைத் தான் பயஸ் விமர்சித்துள்ளதாக கூறப்பட்டது. போபண்ணாவுக்கு பதிலாக தன்னை கலப்பு இரட்டையரில் களமிறக்கியிருக்க வேண்டுமெனவும் அவர் சூசகமாக கூறி உள்ளார்.
இதற்கு சானியா மிர்சா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'நச்சுத்தன்மையான ஒரு நபருடன் சேர்ந்து விளையாடினால் தான் வெற்றி கிடைக்குமென்றால், அது விளையாட்டே அல்ல' என மிக கோபமாக பதிலளித்துள்ளார்.
The ONLY way to win with a toxic person, is not to play!!! #karmaiswatching #zenmode 😇🙏
— Sania Mirza (@MirzaSania) September 18, 2016
சானியாவின் இந்த கருத்தினை ஏராளமானோர் ரீடுவீட் செய்துள்ளனர். அவர்களில் போபண்ணாவும் ஒருவர், அவர் தனது டுவி்ட்டரில், ''இது திரும்பவும் நடைபெற்றுள்ளது... சக வீரர்களை வசைபாடி மீடியாக்களில் செய்தி வருவதற்காக செய்யப்படும் வழக்கமான சூழ்ச்சிதான் இது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
At it again!! ...the usual ploy to stay in the news by slanging fellow players in media. #Patriotism
— Rohan Bopanna (@rohanbopanna) September 18, 2016
சக டென்னிஸ் வீரர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் மோதிக்கொள்வது ஆரோக்கியமான விளையாட்டிற்கு உகந்ததல்ல என்று விளையாட்டு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.