பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதிப் போட்டிக்கு சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
அடுத்தடுத்து பட்டங்களைக் குவித்து வரும் இந்த ஜோடிக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்த ஜோடி மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சமீபத்தில் நடந்த வூஹான் ஓபன் வெற்றி கொடுத்த தெம்போடு இந்தத் தொடரில் கலந்து கொண்ட சானியா - ஹிங்கிஸ் ஜோடி, காலிறுதிப் போட்டியில், ஜெர்மனி - செக் நாட்டு ஜோடியான ஜூலியா ஜார்ஜஸ் மற்றும் கரோலினா பிளிஸ்கோவாவை 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.
இந்த ஆண்டு இதுவரை சானியா - ஹிங்கிஸ் ஜோடி 7 மகளிர் இரட்டையர் பட்டங்களை வென்று அசத்தியுள்ளது. அதில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் அடக்கம் ஆகும். கடந்த மார்ச் முதல் இருவரும் இணைந்து ஆடி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.
இதில் 3 தொடர்களில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் இந்த ஜோடி வெற்றி பெற்றது முக்கியமானது.