ஏமாற்றம்
இதுகுறித்து சானியா மிர்ஸா கூறுகையில், பல்வேறு காரணங்களால் இந்த ஈத் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. ஏழைகள், பாதிக்கப்பட்டோர் குறித்த சிந்தனையே அதிகம் இருந்தது. நம்மை விட வசதி குறைவானவர்களின் நிலை குறித்தே மனசு சிந்தித்தது. பலர் உயிருக்காக போராடுகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். கராச்சி விமான விபத்து.. இப்படி நிறைய சோகங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிரார்த்தனை செய்வோம்
அனைவருக்காகவும் நாம் இந்த நேரத்தில் பிரார்த்திக்க வேண்டும். அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். மனித குலத்துக்காக பிரார்த்திப்போம். நல்ல ஆரோக்கியத்துக்காக பிரார்த்திப்போம். அமைதிக்காக பிரார்த்திப்போம். துவேஷத்தை கைவிடுவோம். அனைவரையும் நேசிப்போம். அனைவரும் இணைந்து நிற்போம். உலகமே இன்று ஒன்றுபட்டு இருக்கிறது. இது நீடிக்க வேண்டும் என்றும் சானியா கூறியுள்ளார்.
கிடைத்ததற்கு நன்றி
இந்த நாளில் நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதற்கு நன்றி சொல்வோம். அனைவரும் இணைந்து அருமையான உலகைப் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்வோம். இந்த நேரத்தில் அனைவரும் தனித்திருப்போம். வீடுகளிலேயே இருப்போம். நமது குடும்பத்தினர், உறவினர்களுடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம் என்றும் கூறியிருந்தார் சானியா மிர்ஸா.
முதல் ரம்ஜான்
33 வயதாகும் சானியா மிர்ஸா, குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் விளையாடாமல் இருந்தார். இந்த ஆண்டுதான் அவர் மீண்டும் விளையாடத் தொடங்கினார். ஹோபர்ட் இன்டர்நேஷனல் போட்டியில் பட்டம் வென்றார். மீண்டும் விளையாட வந்த பிறகு அவருக்கு இது முதல் ரம்ஜான் ஆகும். ஆனால் மிகுந்த சந்தோஷத்துடன் அதைக் கொண்டாட முடியாத அளவுக்கு ஏகப்பட்ட சோகச் சம்பவங்கள் நடந்து விட்டன என்பதை சானியாவின் டிவீட்டுகள் வெளிக்காட்டுகின்றன.