குழந்தை பேற்றுக்காக ஓய்வு
சர்வதேச வீராங்கனை சானியா மிர்சா 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர். குழந்தை பேற்றுக்காக கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வில் இருந்த சானியா மிர்சா மீண்டும் தனது பயணத்தை துவங்கியுள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி
இந்நிலையில் ஹோபர்ட் சர்வதேச போட்டியில் உக்ரைனை சேர்ந்த நாடியா கிச்செனோவ்வுடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா அந்த கோப்பையை வென்றுள்ளார்.
வெற்றியுடன் மறுபிரவேசம்
குழந்தை பேற்றுக்காக ஓய்வில் இருந்த சானியா மிர்சா, 27 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தனது மறுபிரவேசத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளார்.
சானியா மிர்சா மகிழ்ச்சி
குழந்தை பேற்றில் தன்னுடைய உடல் திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் தான் நினைத்ததைவிட தான் அதிக திறனுடன் விளையாடியதாகவும் சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சா விளக்கம்
தன்னுடைய வெற்றியின் பின்னால் எந்த ரகசியமும் இல்லை என்றும் தன்னுடைய ஆட்டத்தை தான் அனுபவித்து விளையாடியதாகவும் ஆனால் 27 மாதங்களுக்கு பிறகு விளையாடிய முதல் போட்டியில் மட்டும் சற்று பதட்டம் இருந்ததாகவும் சானியா கூறியுள்ளார்.
ஒரே நாளில் ஏற்படாது
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தான் விளையாடிய இந்த போட்டியில் தான் வெற்றி பெற்றுள்ள போதிலும் பேறு காலத்திற்கு பிறகான தன்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றம் தேவைப்படுவதாக குறிப்பிட்ட சானியா மிர்சா, ஆனால், இந்த முன்னேற்றம் ஒரே நாளில் ஏற்படாது என்றும் அதற்காக அதிக பயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து போட்டிகளிலும் கவனம்
ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவது குறித்து தான் தற்போது அதிக கவனம் செலுத்தவில்லை என்றும், தற்போது விளையாடிவரும் அனைத்து கோப்பை தொடர்களிலும் அதிக கவனம் கொடுத்து விளையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடும் உழைப்பிற்கான பரிசு"
இந்நிலையில் சானியா மிர்சாவின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு இந்த வெற்றி என்று சானியாவின் முன்னாள் இரட்டையர் இணை மகேஷ் பூபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.