சர்வதேச சாதனை பெண்மணி
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி பெருமை சேர்த்தவர். கடந்த 2010ல் இவருக்கு சோயிப் என்பவருடன் ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2018 அக்டோபர் 30ல் சானியாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பேறு காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா விலகியிருந்தார்.
ஹோபர்ட் சர்வதேச கோப்பை வெற்றி
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்சா களமிறங்கி விளையாடத் துவங்கியுள்ளார். கடந்த மாதத்தில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச கோப்பை போட்டியில் தனது பார்ட்னர் நதியா கிச்செனோக்குடன் களமிறங்கி ஆடிய சானியா மிர்சா, அந்த கோப்பையை வென்று தன்னுடைய மறுபிரவேசத்தை இனிதாக்கினார். இதன்மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை அவர் துவக்கியுள்ளார்.
சானியாவின் சாதனை
இந்நிலையில் குழந்தை பேறு காரணமாக அதிகரித்திருந்த தன்னுடைய உடல் எடையை 4 மாதங்களில் குறைத்து சானியா மிர்சா சாதனை புரிந்துள்ளார். இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சானியா மிர்சா, இதன்மூலம் சாதாரணமாகவும், குழந்தை பேறுக்கு பிறகுமான அதிகரிக்கும் எடையை குறைக்க விரும்பும் பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பதிவு
4 மாதங்களில் தன்னுடைய 26 கிலோ எடையை குறைத்துள்ளார் சானியா மிர்சா. தன்னுடைய எடை குறைப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சானியா மிர்சா, இந்த இலக்கை தான் 4 மாதங்களில் முடித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். குழந்தை பேற்றுக்கு பிறகு தான் மீண்டும் பிட்னசை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சானியா மிர்சா வழிகாட்டுதல்
நம்முடைய இலக்கு குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கானதாக இருந்தாலும் அது குறித்து பெருமிதம் கொள்ளுங்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் சானியா மிர்சா தெரிவித்துள்ளார். மேலும் உங்களுடைய கனவுகளை துரத்துங்கள் என்று தெரிவித்துள்ள சானியா மிர்சா, உன்னால் அது முடியாது என்று கூறுபவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
சானியா நம்பிக்கை
தொடர்ந்து பேசியுள்ள சானியா மிர்சா, உன்னால் முடியாது என்று கூறுபவர்கள் எவ்வளவு பேர் உங்களுடன் தொடர்ந்து இருப்பார்கள் என்பதை கடவுள் மட்டுமே அறிய முடியும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து என்னால் இந்த சாதனையை நிறைவேற்ற முடிந்தபொழுது, உங்களாலும் முடியும் என்றும் தன்னம்பிக்கை அளித்துள்ளார்.