விம்பிள்டன்: டென்னிஸ் உலகின் இரு பெரும் ஸ்டைல் ஸ்டார்களான செரீனா வில்லியம்ஸும், மரியா ஷரபோவாவும் மீண்டும் ஒரு நேருக்கு நேர் மோதலில் ஈடுபடப் போகிறார்கள்.
இருவரும் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதும் சூழல் வந்திருப்பதால் இருவரின் ரசிகர்களும் பெரும் ஆவலாக போட்டியை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இப்படி முன்கூட்டியே வந்து மோதுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்ன செய்வது இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு வந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும், விறுவிறுப்பும் கூடியிருக்கும். ஆனால் முன்கூட்டியே இடி மின்னலுடன் கூடிய மழையை விம்பிள்டனில் ரசிகர்கள் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
காலிறுதிப் போட்டியில் விக்டோரியா அஸரென்காவை 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய செரீனா அரை இறுதிக்குள் நுழைந்தார். முதல் செட்டில் அஸரென்கா பயமுறுத்தினாலும் கூட அடுத்த இரண்டு செட்களையும் அராத்தாக ஆடி அதிரடியாக கைப்பற்றி.. நான் செரீனா என்பதை ஆணித்தரமாக நிரூபித்து விட்டார்.
23வது நிலையில் இருக்கும் அஸரென்காவும் செரீனாவுக்கு செம போட்டியைக் கொடுத்தார் முதல் செட் ஆட்டத்தைப் பார்த்தபோது செரீனா தோற்று விடுவாரோ என்ற அச்சமும் கூட ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அடுத்த 2 செட்களையும் அசத்தலாக வென்றார் செரீனா.
தற்போது தனது பழைய எதிரி மரியாவை அரை இறுதியில் எதிர்கொள்கிறார் செரீனா. இருவரும் இதுவரை 19 முறை மோதியுள்ளனர். ஆனால் இதில் செரீனாதான் 17 முறை வென்று அசத்தலான நிலையில் உள்ளார்.
விம்பிள்டனில் செரீனா வென்றால் அது அவருக்கு தொடர்ச்சியான 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும், மொத்தத்தில் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.