ஆகஸ்ட் 31ல் துவக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளும் செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கி செப்டம்பர் 13ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.
தீவிர கொரோனா பரிசோதனை
ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் மிகுந்த பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதியே இந்த போட்டியில் பங்கேற்க அமெரிக்கா வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகோவிச் எதிர்ப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அமெரிக்க டென்னிஸ் கழகத்தின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாதனையை முறியடிக்க காத்திருப்பு
இந்நிலையில் வீடியோ மெசேஜ் மூலம் பேசியுள்ள முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இந்த அறிவிப்பு தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், அந்த தொடரில் பங்கேற்பதற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இந்த தொடரில் வெற்றி பெற்று 24வது பட்டத்தை வென்றால், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் முந்தைய சாதனையை முறியடிப்பார்.