டாப் சீட் ஓபன் டென்னிஸ் 2020
கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியிருந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகள் மீண்டும் துவங்கியுள்ள நிலையில் கென்டக்கியின் லெக்சிங்டனில் நடைபெற்றுவரும் டாப் சீட் ஓபன் டென்னிஸ் 2020 தொடரில் பங்கேற்று செரீனா வில்லியம்ஸ் விளையாடி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாடினாலும் அவரது ஆட்டத்தில் வேகம் குறையவில்லை.
வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்
நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்க வீராங்கனை பெர்னார்டா பெராவை 4 -6, 6 -4 மற்றும் 6 -1 என்ற செட் கணக்குகளில் தோற்கடித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். இரண்டாவது செட்டில் அவர் சிறிது தடுமாறினாலும் பின்பு சுதாரித்துக் கொண்டு தன்னுடைய ஆட்டத்தை வேகப்படுத்தி பெராவை வெற்றிக் கொண்டார். இதனிடையே இரண்டாவது சுற்றில் தன்னுடைய மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்சை அவர் எதிர்கொள்ளவுள்ளார்.
தயாராகிவரும் செரீனா
வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும்விதமாக பயிற்சிகளை மும்முரப்படுத்தியுள்ள செரீனா வில்லியம்ஸ், இதுவரை பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டுவந்த தனக்கு இந்த தொடர் உற்சாகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முதல் போட்டித் தொடர்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச டென்னிஸ் போட்டிகள் முடங்கிய நிலையில் டபள்யூடிஏ டூர் தொடரான டாப் சீட் ஓபன் முதல் போட்டித் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. தன்னுடைய 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சிக்காக காத்திருக்கும் செரீனா வில்லியம்ஸ் 4 மாதங்களுக்கு பிறகு இந்த தொடரில் மிகவும் உற்சாகமாக விளையாடி வருகிறார்.