பாரிஸ் : கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே பிரெஞ்சு டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றுப் போட்டி கடந்த 27-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் சக நாட்டவரான கிறிஸ்டி ஆன்-ஐ சந்தித்தார்.
இதில் செரீனா 7 (7) - 6 (2), 6 - 0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பல்கேரியா நாட்டை சேர்ந்த பிரோன்கோவுடன் மோத இருந்தார்.
இந்நிலையில் தனக்கு குதிகால் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்தும் செரீனா வில்லியம்ஸ் விலகினார்.
குதிகாலில் ஏற்பட்டுள்ள காயத்தால் தான் நடக்கவே சிரமப்படுவதால் இந்த சீசன் முழுவதும் தன்னால் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
பாதியில் வெளியேறிய வீரர்.. காணாமல் போன "முக்கிய ரிப்போர்ட்".. ஐபிஎல்லில் விஸ்வரூபமெடுக்கும் விவகாரம்
இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள செரீனா, கடைசியாக 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் தான் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார்.
அதுவே பெரிய போட்டிகளில் அவர் பெற்ற அதிகபட்ச வெற்றியாகும். 2017இல் மகப்பேறு காரணமாக ஓய்வில் இருந்த அவர் அதன் பின் மீண்டும் டென்னிஸ் ஆடினாலும் பெரிய சாம்பியன் பட்டம் எதுவும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனி செரீனா டென்னிஸ் போட்டிகளில் பார்க்க சில மாதங்கள் ஆகலாம்.