மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் மகேஷ்பூபதி-சானியா மிர்சா ஜோடி நுழைந்துள்ளது. ஒற்றையர் போட்டியில் சானியா மிர்சா 3வது சுற்றில் தோல்வி அடைந்தார். இந் நிலையில் சானியா மிர்சா-மகேஷ் பூபதி ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் சர்வதேச அரங்கில் 2ம் நிலை வகிக்கும் ஜோடியான சுவீடனின் சிமோன் ஆஸ்பெலின்-அமெரிக்காவின் லிசா ரேமன்ட் ஜோடியுடன் மோதினர். இதில் பூபதி-சானியா ஜோடி 6-3, 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் காலிறுதியில் அவர்கள் எதிர்த்து விளையாட இருக்கும் ஜோடிகளான மார்ட்டின் டாம், வெடா பெஸ்சிக் ஜோடி விலகி விட்டதால் இவர்கள் நேராக அரையிறுதிக்குள் நுழைவது உறுதியாகிவிட்டது. தோல்வியை தழுவிய வீனஸ் சகோதரிகள்: இதற்கிடையே பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியா நாட்டு வீராங்கனை அனா இவானோவிக்கிடம் 7-6(7-3), 6-4 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதே போல் மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஏற்கனவே தோல்வி அடைந்து வெளியேறிவிட்டது நினைவிருக்கலாம். இதன் மூலம் வில்லியம்ஸ் சகோதரிகளின் கிராண்ட் ஸ்லாம் கனவு தவிடு பொடியாகிவிட்டது. பெண்கள் ஒற்றையர் அரை இறுதி போட்டியில் அனா இவானோவிக் -ஹண்ட் சோவாவும், மற்றொரு அரை இறுதியில் மரியா ஷரபோவா- ஜெலினாஜான் கோவிக் மோதுகிறார்கள்.