பெய்ஜிங்: இந்திய டென்னிஸ் நட்சத்திரங்களான லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா ஆகியோர் நாளை முதல் தங்களது பதக்க துரத்தலைத் தொடங்குகின்றனர். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பதக்க கனவு ஒவ்வொன்றாக தகர்ந்து வருகிறது. இந்தப் பின்னடைவான நிலையில் மிகப் பெரிய நம்பிக்கையுடன் இந்தியர்கள் பார்க்கக் காத்திருக்கும் டென்னிஸ் போட்டிகள் நாளை தொடங்குகின்றன இந்தியாவின் ஸ்டார் வீரர்களான சானியா, பயஸ், பூபதி ஆகியோர் நாளை முதல் ஆடத் தொடங்குகின்றனர். இவர்களில் லியாண்டர் - பூபதி மீதுதான் அனைவரின் கவனமும் படிந்திருக்கிறது. இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தங்களது பிரச்சினைகளை ஓரம் கட்டி வைத்து விட்டு, நாட்டுக்காக இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாடவுள்ளனர். இருவரும் இணைந்து எத்தனையோ சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர். இகருவரும் இணைந்து மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளனர். ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பு கிட்டத்தட்ட கிடைத்த நிலையில் குரோஷிய ஜோடியிடம் தோல்வியடைந்து பதக்கத்தை நழுவ விட்டனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது. நாளை தொடங்கும் இரட்டையர் போட்டியின் முதல் சுற்றுஆட்டத்தில் பிரான்ஸ் ஜோடியான கேயல் மோன்பில்ஸ், கில்லஸ் சைமோன்ஸ் ஆகியோரை எதிர்த்து பயஸ்- பூபதி ஜோடி ஆடவுள்ளது. இன்னும் ஒரு பதக்கம் வெல்ல காத்திருப்பதாக பயஸ் தெரிவித்துள்ளார். அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர் பயஸ். தற்போது மீண்டும் ஒரு பதக்கம் வெல்ல ஆர்வத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அட்லாண்டாவில் நான் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றேன். இப்போது இரட்டையர் பிரிவிலும் பதக்கம் வெல்ல ஆசைப்படுகிறேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் பயஸ். இதேபோல சானியா - சுனிதா ராவ் ஜோடியும் பதக்க நம்பிக்கையுடன் களம் புகுகிறது. வெற்றி பெற வாழ்த்துவோம்.