இண்டியன்வெல்ஸ்: அமெரிக்காவில் நடந்து வரும் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடக்கிறது.நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் வைல்டு கார்டு வீராங்கனையாக களமிறங்கிய இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரனை சேர்ந்த மரியா கோரிட்சேவாவை எதிர்கொண்டார்.முதல் செட்டில் மோசமாக விளையாடிய சானியா 2-6 என அதை இழந்தார். ஆனால், போட்டி கைமீறி போக இருப்பதை உடனடியாக உணர்ந்து கொண்ட சானியா இரண்டாவது செட்டில் எழுச்சி கண்டார். அதை 6-3 என வென்றார்.தொடர்ந்து சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றினார். இறுதியில் 2-6, 6-3, 6-2 என்ற செட்களில் வென்றார். இவர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவை சந்திக்கிறார்.