சீனாவில் 2,700 பேர் பலி
கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 2,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவியை பெற்று வருகின்றனர். இதேபோல சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் பாதிப்பு
கொரனோ வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு தொடர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இத்தாலியில் நடைபெறவிருந்த கால்பந்தாட்ட போட்டிகள், சீனா மற்றும் ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம், ஹாங்காங் ரக்பி தொடர், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த மகளிர் கோல்ப் தொடர்கள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்கொரியா ஒத்திவைப்பு
இந்நிலையில் தென்கொரியாவின் பூசன் நகரில் வரும் 22 முதல் 29ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது ஜூன் 21 முதல் 28 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடரேஷன் அறிவித்துள்ளது. கொரனோ வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
893 பேர் பாதிப்பு
தென்கொரியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு 893 பேர் உள்ளாகி உள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த நெருக்கடியான சூழ்நிலையில், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, டேபிள் டென்னிஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.