திடீர் காயம்
அப்படி, இந்திய ரசிகர்களின் பல்ஸை எகிற வைக்கும் மிக முக்கியமான வீராங்கனைகளில் ஒருவர் செரீனா வில்லியம்ஸ். இந்நிலையில், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
கணுக்கால் காயம்
பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயன்றார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் இருந்த நிலையில், அதற்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
உருக்கமான பதிவு
இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். இதன் மூலம் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்தது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில் "காயமடைந்த பின்னர் நான் களத்தில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. இதனால் நான் மனம் உடைந்தேன். எனினும் நான் களத்திற்குள் வந்த போதும், வெளியேறிய போதும் என்னை வரவேற்று வழியனுப்பிய ரசிகர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். டென்னிஸ் களம் தான் என் உலகம்" என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
மீண்டு வாங்க செரீனா
இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற்று மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலக டென்னிஸ் சங்கம், விம்பிள்டன் அமைப்பும் செரீனா குணமடைந்து மீண்டும் களம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகள் தெரிவித்துள்ளன. மீண்டு வாங்க செரீனா!