SDAT மைதானத்தின் சிறப்பு
கடந்த 1995ம் ஆண்டு ரூ.7.50 கோடி செலவில் கட்டப்பட்டது தான் இந்த SDAT மைதானம். சர்வதேச தரத்தில் ஒரு மெயின் கோர்ட்டும், பயிற்சிகளுக்காக தனியாக 6 டென்னிஸ் கோர்ட்களும் இதில் அடங்கியுள்ளன. வீரர், வீராங்கனைகள் உடற்பயிற்சி செய்யும் கூடங்களும் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டிருந்ததால் இந்தியாவின் டாப் 5 டென்னிஸ் மைதானங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
ஜாம்பவான்கள் ஆடிய மைதானம்
இந்த மைதானத்தில் தான் கடந்த 2017 -18ம் ஆண்டு ஓப்பன் ATP சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் உலகின் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்களான பாட்ரிக் ராஃப்டர், ரஃபேல் நடால், மாரின் கிலிக், கார்லஸ் மோயா, ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா ஆகியோர் இதில் விளையாடி அசத்தினர்.
ஸ்டேடியத்தின் நிலைமை
இந்நிலையில் இப்படிப்பட்ட புகழ்பெற்ற மைதானத்தில் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. தரைகள், இருக்கைகள் என அனைத்து இடங்களும் மிகவும் மோசமான நிலையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. நடந்து செல்லும் பாதைகள் அனைத்து பறவைகளின் கழிவுகள் உள்ளதால், டென்னிஸ் வீரர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
அமைச்சரின் ஆய்வு
கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், இங்கு உள்ள பழுதுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மைதானத்தை மறுசீரமைப்பதற்கு கடந்த ஆட்சியில் 1.48 லட்ச ரூபாய் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு எந்த ஒரு பணியும் தொடங்கப்படாமல் இருக்கிறது என்றும் அந்த பணியினையும் விரிவுபடுத்தி விரைவில் பணிகள் முடித்து உலகத்தரம் வாய்ந்த மைதானமாக நுங்கம்பக்கம் மைதானம் மாற்றப்படும் எனவும் கூறியிருந்தார்.
வீரர்களின் எதிர்பார்ப்பு
ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் மைதானத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் தான் முன்னுரிமையா என்ற விவாதம் நீண்ட வருடங்களாக இருந்து வரும் நிலையில், டென்னிஸ் மைதானத்தின் இந்த நிலைமை, அந்த கேள்வியை ரசிகர்களிடம் அதிகரிக்க வைத்துள்ளது.