லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் அரையிறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், மரிய ஷரபோவாவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே அபாரமான சர்வீஸ்களால் செரீனா திணறடித்தார்.
ஒரு மணி நேரம் 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், செரீனா, 6-2, 6-4 என்ற நேர்செட்களில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இது ஷரபோவாவுக்கு எதிராக செரீனா பெறும் 17 வது வெற்றியாகும்.
விம்பிள்டன் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், செரீனாவுடன் தரவரிசையில் 20 வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா மோத உள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, மெட்கோஸ்கி-வெட்னினா ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் 6-2, 6-1 என்ற செட்கணக்கில் பயஸ் ஜோடி வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது.