அரையிறுதிக்கு முன்னேறிய ஒசாகா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா காலிறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்சை 6க்கு 3 மற்றும் 6க்கு 4 என்ற நேரடி செட் கணக்கில் தோல்வியை தழுவ செய்துள்ளார். விறுவிறுப்பான இந்த போட்டியை அடுத்து அவர் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜெனிபர் பிராடியுடன் மோதல்
ஒரு மணிநேரம் மற்றும் 20 நிமிடங்களில் இந்த போட்டி நிறைவடைந்தது. சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள ஒசாகா, யுஎஸ் தொடரின் அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை நாளை எதிர்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என்று அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பழிதீர்த்துக் கொண்ட ஒசாகா
9வது இடத்தில் இருந்தாலும் 93வது இடத்தில் உள்ள ஷெல்பி ரோஜர்சுடன் அவர் மோதிய போட்டிகளில் அவர் தொடர்ந்து தோல்வியையே தழுவியுள்ளார். அவருடன் தோல்வியடைந்த போட்டிகள் தன்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்ததாகவும் தற்போது அவரை காலிறுதியில் தோற்கடித்ததன்மூலம் அவரை தான் பழிதீர்த்துக் கொண்டதாகவும் ஒசாகா தெரிவித்துள்ளார்.
விதவிதமான மாஸ்க் அணியும் ஒசாகா
இதனிடையே ஒசாகாவுடன் நாளை மோதவுள்ள பிராடி காலிறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தானை சேர்ந்த யுலியா புடின்சேவாவை 6க்கு 3 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் தோற்கடித்துள்ளார். கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டின் கொலைக்கு நியாயம் கோரி ஒசாகா, இந்த தொடரில் வித்தியாசமான மாஸ்க்குகளை அணிந்து தன்னுடைய எதிர்ப்பை காட்டி வருகிறார்.