அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள்
அதேசமயம், நியூயார்க்கில் ஆகஸ்ட் 31ம் தேதி திட்டமிட்டபடி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை நடத்துவது என்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிர்வாகிகள் உறுதியாக உள்ளனராம். நேற்றுதான் விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் தங்களுக்கு போதிய கால அவகாசம் இருப்பதால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்தில் நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நிர்வாகிகள் உள்ளனர்.
தற்காலிக கொரோனா மருத்துவமனை
தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் மைதானத்தின் உள்ளரங்குகளைத்தான் தற்காலிக மருத்துவமனை ஆக்கியுள்ளனர். இருப்பினும் போட்டிகளை நடத்த கால அவகாசம் நிறைய இருப்பதால் திட்டமிடட்படி போட்டிகளை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் நிர்வாகிகள்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை
இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலையில் திட்டமிட்ட காலத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கேற்றார் போல எங்களது பணிகளும் தொடர்ந்து நடைபெறும். தற்போதைய நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்து முன்னேற்பாடுகளையும் உரிய முறையில் செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனாவைரஸ்
நியூயார்க்கில்தான் கொரோனாவைரஸ் மிகக் கடுமையாக பரவி வருகிறது. இதனால் மொத்த நியூயார்க்கும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அமெரிக்க டென்னிஸ் சங்கம் தற்போது அரசு மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்றார் போல செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியானது ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைரஸ் காரணமாக ஏற்கனவே பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. நேற்று விம்பிள்டனும் ரத்தாகி விட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.