ஜனவரி முதல் சர்வதேச போட்டிகள்
சர்வதேச டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்த இவருக்கு 2018 அக்டோபரில் இஷான் என்ற மகன் பிறந்துள்ளார். இதையடுத்து இரண்டரை ஆண்டுகள் ஓய்வில் இருந்த சானியா, கடந்த ஜனவரி மாதம் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
முதல் வீராங்கனை
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சானியா மிர்சா, இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற பெட் கோப்பை போட்டியில் ப்ளே ஆப் சுற்றுவரை முன்னேறினார். முதன்முதலில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சாதனை இது. இதனிடையே, கடந்த மாதத்தில் ஆசிய பிரிவில் பெட் கப் ஹார்ட் விருதை பெற்றுள்ளார். இவரை போலவே இந்தோனேசியாவின் பிரிஸ்கா மெடலின் நுக்ரோர்ஹோவும் இந்த விருதை பெற்றுள்ளார்.
இஷான் குறித்து மகிழ்ச்சி
எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டு வருபவர் சானியா மிர்சா. இவருக்கென்று தனி ரசிகர்கள் வட்டமும் உள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்த தன்னுடைய பகிர்வுகளை இவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், தன்னுடைய மகன் இஷான் கையில் டென்னிஸ் பேட்டுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை இவர் பகிர்ந்திருந்தார்.
சானியா மிர்சா பகிர்வு
இந்நிலையில், தற்போது, தன்னுடைய மகன் மற்றும் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சானியா மிர்சா. தங்களுடைய காலைப் பொழுது இவ்வாறுதான் விடியும் என்றும் அதில் கேப்ஷனையும் சேர்த்துள்ளார். தன்னுடைய மகன்தான் அவருடைய உலகம் என்பதை அந்த புகைப்படம் சொல்லாமல் சொல்கிறது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் ஏராளமான லைக்குகளை அள்ளியுள்ளது.