லண்டன் : விம்பிள்டன் ஆடவர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர், ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2019 விம்பிள்டன் ஆடவர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (ஜூலை 12) நடைபெற்றது. உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர் - ரபேல் நடால் மோதியதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது இந்தப் போட்டி.
இந்தப் போட்டி துவங்கும் முன் முதல் அரையிறுதிப் போட்டியில் மற்றொரு முன்னணி வீரர் ஜோகோவிக் வெற்றி பெற்று முதல் நபராக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவருடன் மோதப் போவது நடாலா? அல்லது பெடரரா? என்ற பரபரப்பும் இந்தப் போட்டிக்கு முன் தொற்றிக் கொண்டது.
ஆட்டத்தின் முதல் செட்டை பெடரர் 7-6 என்ற கணக்கில் போராடி வென்றார். இரண்டாவது செட்டை நடால் 1-6 என மிக எளிதாக வென்றார். மூன்றாவது செட்டில் பெடரர் கை ஓங்கியது. நடால் எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்தது. பெடரர் அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார்.
நான்காவது செட்டை வென்றால் மட்டுமே ஆட்டத்தில் தாக்குப் பிடிக்கலாம் என்ற நிலையில் இருந்த ரபேல் நடால், அந்த செட்டிலும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார். பெடரர் அபாரமாக ஆடி நான்காவது செட்டை 6-4 என கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.
A ninth #Wimbledon title in sight... pic.twitter.com/aPcXMGaY0q
— Wimbledon (@Wimbledon) July 12, 2019
ரோஜர் பெடரர் 7-6(3), 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதுவரை எட்டு முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள ரோஜர் பெடரர் தன் ஒன்பதாவது பட்டம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார். இறுதிப் போட்டியில் ஜோகோவிக்கை சந்திக்கிறார்.
கடைசியாக பெடரர் - நடால் மோதிய பிரெஞ்சு ஓபன் போட்டியில் நடால் நேர் செட்களில் பெடரரை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்து இருந்தார். அதற்கு பழி தீர்க்கும் வகையில் பெடரர் அபார வெற்றி பெற்றார். நடால் துவக்கத்தில் தன்னம்பிகையுடன் ஆடினாலும், மூன்றாவது மற்றும் நான்காவது செட்டின் போது தவறுகள் செய்ய ஆரம்பித்தார். அது அவரின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.