லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி அல்லது ரத்து செய்யப்படும் என்று அனைத்து இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை திட்டமிடப்பட்டுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ரசிகர்கள் இல்லாத மூடிய மைதானத்திற்குள் நடத்தப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் மேற்கொள்ளக்கூடிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் விம்பிள்டன் போட்டிகள் டென்னிஸ் உலகின் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெறுவதற்கு டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்படும் இந்தப் போட்டிகள் சர்வதேச அளவில் ரசிகர்களை கட்டிப்போடும் தொடராகும்.
வரும் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதிவரை இந்த ஆண்டிற்கான விம்பிள்டன் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அனைத்தும் கொரோனா பீதியால் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், விம்பிள்டன் குறித்த அறிவிப்பு இதுவரை செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான விம்பிள்டன் போட்டிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று அனைத்து இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் இதுகுறித்து நிர்வாகிகள் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டு, அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாம் நினைத்ததைவிட அதிகமான அளவில் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில் ஐரோப்பா மற்றும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நம்முடைய இதயம் இருக்கிறது என்று ஏஇஎல்டிசியின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் லிவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மற்ற எதைப்பற்றியும் நாம் கவலைகொள்ளாமல், மக்களின் உடல்நலன் குறித்து மட்டுமே கவலை கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை கருத்தில் கொண்டே விம்பிள்டன் போட்டிகள் குறித்தும் நாம் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுட்டுள்ளார். ஆனால் விம்பிள்டன் போட்டிகள், ரசிகர்கள் இல்லாத மூடிய மைதானத்தில் நடத்தப்படாது என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்கு இந்த தொடர் ஒத்திவைக்கப்படலாம் என்றும், ஆனால் கொரோனா வைரஸ் குறித்து தீர்மானித்தே இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.