ஒத்திவைக்கப்பட்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
முன்னதாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரான்ஸும் சிக்கித் தவிக்கிறது. இதனால் இந்தப் போட்டித் தொடரை செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடத்த தற்போது திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோலன்ட் காரோஸ் மைதானத்தில் புதிய மேற்கூரை
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் ரோலன்ட் காரோஸ் சென்டர் கோர்ட் பகுதியில் புதிதாக மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளது அங்கு ஒளிவெள்ளம் பாய்ச்சக் கூடிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 3 முக்கிய மெயின் கோர்ட்டுகளிலும் இதேபோல பொருத்தப்பட்டுள்ளது. இதனால் போட்டிகள் தங்கு தடையின்றி நடைபெறும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திட்டமிட்டபடி விம்பிள்டன் டென்னிஸ்
இந்த நிலையில்தான் விம்பிள்டன் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஒத்திப்போடுவது என்ற பேச்சே எழவில்லை. காரணம், அதற்குள் வைரஸ் தாக்கம் குறைந்து விடும் என்று விம்பிள்டன் நிர்வாகம் கருதுவதாக தெரிகிறது. இதேசமயம், மக்களின் பாதுகாப்பையும் நாங்கள் கருத்தில் கொள்வோம் என்று அனைத்து இங்கிலாந்து புல் தரை டென்னிஸ் கிளப்பின் தலைமை செயலதிகாரி ரிச்சர்ட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
ரிச்சர்ட் லூயிஸ் கூறுவது என்ன?
இதுகுறித்து ரிச்சர்ட் கூறுகையில், இது முக்கியமான விஷயம். எங்களது வீரர்கள், கிளப் உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரின் நலனும் எங்களுக்கு முக்கியம். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசின் கருத்து மற்றும் ஆலோசனையையும் நாங்கள் வரவேற்கிறோம். தற்போதைய நிலையில் போட்டித் தொடருக்கான பணிகள் தொடர்கின்றன. அதேசமயம், மக்கள் நலனையும் மனதில் வைத்து செயல்படுவோம் என்றார் அவர்.