புது தில்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஏற்கனவே மைதான பராமரிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், தற்போது உலகின் முன்னணி வீரர் ஒருவர், "டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினால் என்னால் விளையாடு முடியாது" என்று கூறி தொடரை விட்டு வெளியேறியுள்ளார்.
உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஆண்டர்ஸ் ஆன்டன்சென் (Anders Antonsen) தான் இந்தத் அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஆன்டன்சென் டெல்லி இந்தியா ஓபன் தொடரைப் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, "டெல்லியின் காற்று எனக்கு ஒத்துக் கொள்ளாது" என்று கூறி இவர் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆன்டன்சென், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'IQAir' நிறுவனத்தின் காற்று தரக் குறியீட்டு (AQI) ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் டெல்லியின் காற்று தரம் '348 - மிகவும் மோசமானது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"டெல்லியில் தற்போது நிலவும் அதீத காற்று மாசுபாடு காரணமாக, ஒரு பேட்மிண்டன் தொடரை நடத்த இது சரியான இடமாக எனக்குத் தோன்றவில்லை. அதனால் நான் போட்டியிலிருந்து விலகுகிறேன்" என்று அவர் ஓப்பனாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
எந்தவொரு முறையான மருத்துவக் காரணமும் இன்றிப் போட்டியிலிருந்து விலகியதால், உலக பேட்மிண்டன் சம்மேளனம் (BWF) அவருக்கு $5,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.2 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தனது உடல்நலமே முக்கியம் என்று அவர் நாடு திரும்பியுள்ளார்.
"ஆகஸ்ட் மாதம் இங்கு உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. அப்போதாவது கோடைக்காலம் என்பதால் காற்று தரம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்டன்சென் மட்டுமல்ல, அவரது நாட்டு வீராங்கனையான மியா பிளிச்ஃபெல்ட்டும் டெல்லி மைதானத்தின் நிலையை வறுத்தெடுத்துள்ளார். "மைதானம் சுத்தமாக இல்லை. ஆடுகளத்தில் பறவை எச்சம் உள்ளது. தூசு அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது" என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
வெளிநாட்டு வீரர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியப் பேட்மிண்டன் சங்கம் மறுத்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா கூறுகையில், "உள்விளையாட்டரங்கம் என்பதால் வெளிப்புற மாசு உள்ளே வராது. மைதானம் சுத்தமாகவே உள்ளது. மியா போன்ற வீராங்கனைகளுக்குத் தூசி அலர்ஜி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. மற்ற வீரர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியின் காற்று மாசுபாடு விளையாட்டுத் துறையைப் பாதிப்பது புதிதல்ல. கடந்த டிசம்பர் மாதம் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியா வந்திருந்தபோது, பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக அவரது விமானம் தாமதமானது. மேலும் அவர் மைதானத்திற்கு வந்தபோது, அங்கிருந்த மக்கள் "AQI, AQI" என்று கோஷமிட்டு மாசுபாட்டைச் சுட்டிக்காட்டியது சர்வதேச அளவில் இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது முன்னணி பேட்மிண்டன் வீரரும் மாசுபாட்டை காரணம் காட்டி வெளியேறியிருப்பது, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.