அஷ்மிதா சாலிஹா வரலாற்று சாதனை.. கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்
டெல்லி: கொரியாவில் நடைபெற்ற கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் 26 வயது வீராங்கனை அஷ்மிதா சாலிஹா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் 35வது தரவரிசை வீராங்கனையான சீனாவின் ஹான் கியான்சியை அஷ்மிதா எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை இழந்த அஷ்மிதா, மன உறுதியுடன் மீண்டு வந்து 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் போராடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் 11-11 என சமபலத்துடன் மோதினர். ஆனால் அதன் பிறகு சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி 21-14 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்மிதா, இடைவேளையின் போது 11-8 என முன்னிலை பெற்றார். பின்னர் துல்லியமான ஸ்மாஷ் ஷாட்களை விளாசி 21-14 என 2வது செட்டைக் கைப்பற்றி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.
அடுத்து 3வது செட்டை வெல்பவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் சீன வீராங்கனை 11-9 என முன்னிலையில் இருந்தார். இடைவேளைக்குப் பிறகு அஷ்மிதா தனது அபாரமான தாக்குதல் ஆட்டத்தால் 12-11, 15-11 என அடுத்தடுத்து புள்ளிகளைக் குவித்து முன்னிலை பெற்றார். தொடர்ந்து 19-14 என முன்னேறிய நிலையில், சீன வீராங்கனை பந்தை வெளியே அடிக்கவே, 21-14 என்ற கணக்கில் அஷ்மிதா வெற்றியைத் தன்வசமாக்கினார்.
இது அஷ்மிதா சாலிஹா தனது தொழில்முறை பேட்மிண்டன் வாழ்க்கையில் வெல்லும் முதல் பி.டபிள்யூ.எஃப் உலக டூர் (BWF World Tour) பட்டமாகும். இதன் மூலம் பி.டபிள்யூ.எஃப் சூப்பர் 300 அல்லது அதற்கு மேற்பட்ட பட்டத்தைக் கைப்பற்றிய 5வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன் சாய்னா நேவால், பி.வி.சிந்து, தேவிகா சிஹாக் மற்றும் தன்வி சர்மா ஆகியோர் மட்டுமே இச்சாதனையைப் படைத்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications

