ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் டா சூயிங்-கிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளி மட்டுமே கிடைத்தது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பி.வி.சிந்து பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். முதன் முறையாக ஆசிய விளையாட்டில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அடுத்து சிந்து தங்கம் வென்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
எனினும், இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீன தைபெய் நாட்டின் டா சூயிங் 21-13, 21-16 என்ற கேம்களில் வென்றார்.
இந்த ஆண்டில் எந்த இறுதிப் போட்டியிலும் வெல்லாத பி.வி.சிந்து, மீண்டும் ஒரு முறை இறுதியில் தோல்வி அடைந்து பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தினார்.
இந்தியாவின் மற்றொரு பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலம் மட்டுமே வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பத்தாம் நாள், ஆசிய விளையாட்டில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.