ஐதராபாத் : இரண்டு ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு வரும் 22ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் மகளிர் விளையாட்டில் பல வீராங்கனைகள் உச்சம் தொட்டு இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் மேலாக பிவி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்று இருக்கிறார்.அன்றிலிருந்து இன்றுவரை பிவி சிந்து பல சாதனைகளைப் படைத்து ஜொலித்து வருகிறார்.

வெறும் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பிவி சிந்து போட்டிக்காக தமக்கு பிடித்த ஐஸ்கிரீம் உணவை கூட உண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
இந்த நிலையில் பி வி சிந்து தற்போது தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸில் அடி எடுத்து வைக்கப் போகிறார்.29 வயதான சிந்து ஹைதராபாத் சேர்ந்த வெங்கட சாய் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்யப் போகிறார். போசிடஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சாய் இருக்கிறார்.
இந்த ஜோடியின் திருமண நிகழ்வுகள் வரும் டிசம்பர் 20ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. டிசம்பர் 22ஆம் தேதி உதய்பூரில் திருமணமும் 24ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
பி வி சிந்துவின் விளையாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இருவிட்டாரும் இணைந்து திருமண தேதியை திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பிவி சிந்து நடப்பாண்டு தனது கடைசி தொடராக சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பங்கேற்று டிசம்பர் ஒன்றாம் தேதி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளாக எந்த பட்டமும் வெல்லாத பிவி சிந்துவுக்கு இது புத்துணர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் பி வி சிந்து தனது அடுத்த தொடரை ஜனவரி மாதத்தில் தான் தொடங்க இருக்கிறார்.
இதனால் இந்த ஒரு மாதம் எந்த போட்டியில் இல்லாததால் அவருடைய திருமண நிகழ்வு டிசம்பரில் நடத்தப்படுகிறது. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், ஐந்து முறை வேர்ல்ட் டூர் சாம்பியன் பட்டம் காமன்வெல்த், ஆசிய போட்டியில் பதக்கம் என கொடிகட்டி பறக்கும் பிவி சிந்து வரும் 2028 ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க இலக்கை நிர்ணயித்திருக்கிறார்.
திருமணம் ஆனாலும் தொடர்ந்தும் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து கவனம் செலுத்த போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு பல பெருமைகளை வாங்கித் தந்த தங்க மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.