உலக நம்பர் ஒன் வீரர்
பேட்மிண்டன் விளையாட்டின் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து வருபவர் ஜப்பானை சேர்ந்த கென்டோ மோமோட்டா. கடந்த 2016ல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை பெற்று மீண்டு வந்தவர் இவர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்
கடந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆசியா சாம்பியன்ஷிப், அனைத்து இங்கிலாந்து ஓபன் உள்ளிட்ட 11 வெற்றிகளை இவர் பெற்றிருந்தார். கடந்த 2019 இவருக்கு மிகச்சிறப்பான ஆண்டாக இருந்தது.
மலேசியா மாஸ்டர்சில் வெற்றி
இந்நிலையில் மலேசியாவில் நேற்று நடைபெற்ற மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை வெற்றி கொண்டு கோப்பையை கென்டோ மோமோட்டோ கைபற்றினார்.
வேன் ஓட்டுநர் பரிதாப பலி
இந்நிலையில் போட்டியை அடுத்து வேனில் ஓட்டலுக்கு சென்றுக் கொண்டிருந்த போது கென்டோ மோமோட்டா சென்ற வேன் கோலாலம்பூர் அருகே விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் காயம்
இந்த விபத்தில் மோமோட்டாவின் மூக்கு உள்ளிட்ட முகத்தின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் வேனில் பயணம் செய்த பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், பேட்மிண்டன் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேரில் ஆறுதல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மோமோட்டா உள்ளிட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மலேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் சையத் சாதிக், மோமோட்டா உள்ளிட்ட நால்வரும் நலமாக உள்ளதாக தெரிவித்தார்.
விரைவில் நலம்பெற பிரார்த்தனை
இந்த விபத்துக் குறித்து மலேசிய பேட்மிண்டன் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் மோமோட்டா உள்ளிட்டவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளது.