மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான கரோலினா மரின் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 32 வயதான அவர், தொடர்ந்து முழங்கால் காயத்தால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், தனது எதிர்கால உடல்நலனைக் கருத்தில் கொண்டு பேட்மிண்டன் விளையாட்டில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது இந்த திடீர் முடிவு உலகெங்கிலும் உள்ள பேட்மிண்டன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் "எனது பயணம் இத்துடன் முடிகிறது" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு கரோலினா மரின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் அவரது சொந்த ஊரான ஹூயல்வாவில் நடைபெற உள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மைதானத்தில் ரசிகர்களாகிய உங்களை கடைசியாக ஒருமுறை சந்திக்க வேண்டும் என்றுதான் நான் மிகவும் விரும்பினேன். ஆனால் அதற்காக எனது உடலை மீண்டும் ஒருமுறை ஆபத்தில் சிக்க வைக்க நான் சிறிதும் விரும்பவில்லை. நான் எனது முடிவில் தெளிவாக இருக்கிறேன்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு களத்தில் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கரோலினா மரின். 2016 ரியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டி மற்றும் 2018 உலக சாம்பியன்ஷிப் தொடர் என இரண்டிலும் பி.வி. சிந்துவை வீழ்த்தி அவர் சாம்பியன் பட்டம் வென்றார். தனது ஒட்டுமொத்தப் பயணத்தில் 2014, 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டங்களையும், 7 முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டங்களையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் வென்று வரலாற்று சாதனை படைத்தவர்.

2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான முழங்கால் தசைநார் கிழிவால் அவர் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். அதிலிருந்து மீண்டு வந்து கடைசியாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடினார். அப்போது தனக்கு தெரியாமலேயே பாரிஸ் ஒலிம்பிக் களத்திலேயே தனது ஓய்வு அமைந்துவிட்டது என அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். சொந்த ஊரான ஹூயல்வாவில் நடைபெறும் தொடரில் கையில் ராக்கெட்டுடன் களமிறங்காவிட்டாலும், ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இவரது ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து விக்டர் ஆக்செல்சன், இந்தியாவின் சிராக் ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.