டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்துவின் அசத்தல் வெற்றிக்கு கடின உழைப்பு மட்டுமல்ல, அவரது பயிற்சியாளரின் உழைப்பும் அடங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாது.
சிந்துவின் திறமைகளை பட்டைத் தீட்டி வைரமாக்க உதவியவர் மட்டுமள்ள, அவரது பயிற்சியாளர் கோபிசந்த். அதற்கும் மேலே சிந்துவிற்கு மற்றொரு தன்னம்பிக்கை பாடத்தையும் அவர் கற்றுக் கொடுத்துள்ளாராம்.

வித்தியாசமானவர் சிந்து...
அதாவது, பேட்மின்டன் வீராங்கனைகளில் சிந்து வித்தியாசமானவர். ஜுவாலா கட்டா, சாய்னா நேவால் போல மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பொதுவெளியில் வார்த்தைகளை அவர் வீசியதில்லை. தனது ஆட்டங்களின் போது கூட அமைதியாகவே தனது உணர்வுகளை அவர் வெளிப்படுத்துவார்.
(ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அசத்திய பிவி சிந்து- படங்கள்)
அதிர்ந்து பேசாதவர்...
எப்போதுமே சத்தமாக அதிர்ந்து கூட பேசாதது தான் அவருடைய இயல்பு. ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு இது உகந்ததல்ல எனக் கருதியுள்ளார் கோபிசந்த். இதனால் அதிரடியாக ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.
அதிரடி உத்தரவு...
அதாவது, பத்து மாதங்களுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென சிந்துவை நோக்கி கோபிசந்த் 'களத்தில் நீ ஆக்ரோஷமாக கத்தி உணர்வுகளை வெளிப்படுத்தாதவரை, ராக்கெட்டை தொடக்கூடாது' என கறாராக உத்தரவிட்டுள்ளார்.
விளக்கம்...
இதைக்கேட்டு, சிந்துவும் அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களுக்கு கோபிசந்த் அளித்த விளக்கம் வித்தியாசமானது. அதாவது, "பொதுவாக, இந்தியாவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து வருவர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கூட சுதந்திரம் இருக்காது. விளையாட்டு அரங்கில் அப்படி இருந்தால் வேலைக்காகாது.
கெத்து வேண்டும்...
கோபப்பட வேண்டும். ஆக்ரோஷப்பட வேண்டும். கத்த வேண்டும். பாடி லாங்வேஜ் கெத்தாக இருக்க வேண்டும். இதுவெல்லாம் எதிரியை அச்சுறுத்தும் ஒரு கருவி" எனத் தெரிவித்துள்ளார் கோபிசந்த்.
கோபிசந்த் மகிழ்ச்சி...
இதை அப்படியே ஏற்றுக் கொண்ட சிந்து, படிப்படியாக தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டார். இதனால் தான் ரியோவில் பேட்மின்டன் நடந்து வரும் ரியோசென்ட்ரோ ஹாலில், ஒவ்வொரு புள்ளி எடுத்த பின்பும் சிந்து கத்துகிறார். அவருடன் இந்திய ரசிகர்களும் கத்துகின்றனர். இவற்றைப் பார்த்து அமைதியாக சிரித்துக் கொண்டிருக்கிறார் பயிற்சியாளர் கோபிசந்த்.