கிளாஸ்கோ: உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கணையான ஓகுஹாராவிடம் இந்தியாவின் பி.வி. சிந்து போராடி தோற்றார். இப்போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
உலக பேட்மிண்டன் தொடர் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்துவும், ஜப்பானின் நசோமி ஓகுஹாராவும் மோதினர்.

தொடக்கம் முதலே சிந்து போராடினார். முதல் செட்டில் ஒருநிலையில் இருவரும் 3-3 என்ற சமநிலையில் இருந்தனர். ஒருகட்டத்தில் ஓகுஹாராவின் ஆட்டம் கை ஓங்கியது.
19-21 என்ற செட் கணக்கில் சிந்து முதல் செட்டை இழந்தார். 2-வது செட்டும் பெரும் போராட்டமாக இருந்தது. தொடக்கத்தில் சிந்து சற்றே முன்னிலை பெற்று வந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் ஓகுஹாரா சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் சிந்து 22-20 என்ற செட் கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 3-வது செட் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. மாறி மாறி சிந்துவும் ஓகுஹாராவும் முன்னிலை வகித்து வந்தனர்.
இறுதியாக ஓகுஹாரா 22-20 என 3-வது செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.